குடும்பத்தில் வறுமை...நடுங்கும் குளிரில் முந்திரி விற்கும் கல்லுாரி மாணவி - உதவிய அமைச்சர் மகன்
குடும்ப வறுமை காரணமாக தனது கல்வி கட்டணத்திற்காக கால்கடுக்க நள்ளிரவில் சுங்கச்சாவடியில் முந்திரி விற்கும் கல்லுாரி மாணவியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
குடும்பத்தில் வறுமை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அருகே உள்ள பவழங்குடி கிராமத்தைச் சேரந்த கல்லுாரி மாணவி வசந்தி, அவர் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவரின் குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமல் இருந்த நிலையில், தனது தந்தையுடன் உளுந்துார்பேட்டை சுங்கச் சாவடியில் முந்திரி பருப்புகளை விற்பனை செய்து வந்தார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவரின் வீட்டில் மொத்தம் 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். படிக்கும் போதே பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்த வசந்தி, அவப்போது விவசாய பணிகளையும் செய்து வந்துள்ளார்.
தனது கல்லுாரிக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார் வசந்தி, அதனால் தனது தந்தையுடன் முந்திரி பருப்பு விற்பனை செய்து வந்துள்ளார்.
புன்னகை மலரச் செய்த நல்ல உள்ளம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் முந்திரி பருப்பு விற்ற போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர், அவரிடம் பேசும் போது அதை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ அண்மை நாட்களாக வேகமாக பரவியது. வீடியோ வைரலான நிலையில் பலரும் அவருக்கு உதவி செய்வதாக கூறினர்.
இந்நிலையில், கல்லுாரி மாணவி வசந்தியின் வீடியோவை பார்த்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி மஸ்தான் மாணவியின் கல்லுாரி கட்டண செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
மாணவியின் நடப்பு ஆண்டு கல்வி கட்டண தொகை ரூ. 22,500 பணத்தையும் ரொக்கமாக வசந்தியிடம் வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.