நடுரோட்டில் சென்ற கல்லுாரி பேருந்தில் தீ - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து தீ பிடித்து எரிந்தது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி பஸ்சில் இன்று மாலை கல்லூரி முடிந்து 35 மாணவர்களை ஏற்றி கொண்டு கல்லூரி பேருந்து தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் எண்ணூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது கல்லூரி பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.
இதையடுத்து டிரைவர் எபினேஷ் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி பார்த்த போது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.
இதையடுத்து பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் பதறியடித்தபடி பேருந்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர் சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்த நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் மதுரவாயல் தீயணைப்பு அதிகாரி செல்வன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
உரிய நேரத்தில் டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தி பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த 5 தினங்களுக்கு முன்பு தீ விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து வாகன புதுப்பிப்பு சான்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.