கண்களில் இருந்து எறும்பு வெளியேறும் விநோத பாதிப்பால் அவதிப்படும் சிறுமி..மருத்துவ உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்
ராணிப்பேட்டை, ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்த காண்டீபன்- பூங்கொடி என்ற கூலித்தொழில் செய்து வரும் தம்பதிக்கு 14 வயதில் ஷாலினி என்ற மகள் இருக்கிறார்.
9-ம் வகுப்பு படித்து வரும் ஷாலினி பிறந்து கடந்த 13 ஆண்டுகளாக மற்ற பிள்ளைகளை போலவே இயல்பாக இருந்திருக்கிறார். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக திடீரென ஷாலினியின் வலதுபுற கண் வீக்கமடைந்ததுள்ளது.
பின்னர் நாளடைவில் வீக்கமடைந்த கண்களிலிருந்து தொடர்ச்சியாக நாளொன்றுக்கு 15-க்கும் மேற்பட்ட எறும்பு போன்ற சிறிய அளவிலான புழுக்கள் வரத்தொடங்கியுள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி ஷாலினியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக ஷாலினியை பல்வேறு கண் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துள்ளனர். ஆனால் பரிசோதனைகளில் எல்லாம் சீராக இருப்பதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநோதமான பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷாலினி மற்ற சிறார்களை போல் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமலும் படிக்க முடியாமலும் மிகவும் மனவலியுடன் வாழ்ந்து வருகிறார்.
தனது குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை பாதிப்பினை எவ்வாறு சரி செய்வது என தெரியாமல் அவரது தாயார் பூங்கொடி ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் முகாமிற்கு வந்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் உதவ வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கினார்.
இந்த மனுவை பெற்ற ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு மருத்துவர்களிடம் மாணவி ஷாலினியை பரிசோதனை செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து, மாணவி ஷாலினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.