இதுவரை கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணம் - அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலால் கடந்த 2 ஆண்டுகளில் பல லட்சம் உயிர்கள் பறிபோயுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி இந்தியாவில் 4 லட்சத்து 73 ஆயிரத்து 537 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.
இதனிடையே மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பாரதி பிரவின் பவார் மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் நாட்டில் 3 நிறுவனங்களின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 946 பேர் இறந்துள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் பல்வேறு பாதிப்புகள் காரணமாக 1,019 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 89 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 4 மரணங்கள் தடுப்பூசி சார்ந்தவை, 58 தற்செயலானவை, 16 வரையறுக்க முடியாதவை மற்றும் 11 வகைப்படுத்த முடியாதவை ஆகும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த மாதம் 30 ஆம் தேதி நிலவரப்படி தடுப்பூசி போட்டுக்கொண்ட 49 ஆயிரத்து 819 பேருக்கு பல்வேறு வித பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்டவை என்று கூற முடியாது. அதேநேரம், மொத்த பாதிப்புகளில் 47 ஆயிரத்து 691 லேசானவை, 163 தீவிரமானவை, ஆயிரத்து 965 மோசமானவை ஆகும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கூறியுள்ளார்.