பொன்முடியை மடக்கும் அமலாக்கத்துறை... 90 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை 90 பக்க குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அமலாக்கத்துறை பொன்முடி விவகாரம்
தற்போதைய தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி , கடந்த திமுக ஆட்சியில் கனிமவள அமைச்சராக இருந்த போது, செம்மமண் குவாரி டெண்டர்களை தனது உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கியதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
கடந்த 2012-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து அண்மையில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கவில்லை என கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை துவங்கியது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத இந்திய பணங்களும், வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கியதாக கூறப்படும் நிலையில், இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பொன்முடியை அழைத்து சென்று இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்பி'யுமான கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக 90 பக்க குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.