850 கோடி மதிப்புள்ள 50 கிராம் பொருள் - பைக்கில் வைத்து கடத்தப்பட்டதால் அதிர்ச்சி
850 கோடி மதிப்புள்ள கலிபோர்னியம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மர்ம பொருள்
பிஹார் மாநில கோபால்கஞ்ச் மாவட்டத்தின் குசாய்கட் நகருக்கு அருகே உள்ள பல்தேரியில் மாநில காவல் துறையின் சோதனை சாவடியில் போலீஸார் கடந்த 8 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, குடுவை ஒன்றை அவர்கள் மறைத்து வைத்திருப்பதும் ,அதில் பளபளப்பான கருங்கல் போன்ற மர்ம பொருள் ஒன்று இருப்பதையும் கண்டுபிடிக்கப்பட்டது.
கலிபோர்னியம்
பறிமுதல் செய்யப்பட்ட பொருள் கலிபோர்னியம் போன்று இருப்பதால் , சென்னை ஐஐடியில் உள்ள சோதனைக் கூடத்துக்கும், புதுச்சேரியில் உள்ள அணுசக்தி நிறுவனத்துக்கும் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சோதனைகளில், பிடிபட்டது கதிரியக்க கலிபோர்னியம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இது ஒரு கிராம் சர்வதேச சந்தையில் ரூ.17 கோடிக்கு விற்கப்படுகிறது. ஆக, மொத்தம் 50 கிராம் கலிபோர்னியத்தின் சந்தை மதிப்பு ரூ.850 கோடி ஆகும். இந்த கலிபோர்னியம் அணு உலைகளில் மின் உற்பத்திக்காகப்வும், மூளை புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
விசாரணை
இதன் கதிரியக்கத் தன்மை காரணமாக, இந்த தனிமம் மிகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது. இதை சரியாக கையாளாவிட்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியம், இந்தியாவில் வாங்குவதற்கும் விற்பதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட கடத்தல்காரர்களில் உத்தரப் பிரதேசம் பர்சூனி கிராமத்தைச் சேர்ந்தவர் சோட்லால் முதன்மை குற்றவாளி ஆவார். இவருடன் இருந்தவர்களான சந்தன் ராம், சந்தன் குப்தா ஆகியோர் பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் பகுதியில் வசிப்பவர்கள். மூவரும் கூலி வேலைகளைச் செய்பவர்கள். கலிபோர்னியம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.