85 வயது தாத்தா - 65 வயது பாட்டி காதலித்து திருமணம் : குவியும் வாழ்த்து மழை

mysore oldcouplemarriage
By Petchi Avudaiappan Jan 24, 2022 05:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மைசூருவில் 65 வயது மூதாட்டியை 85 வயது முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகரில் வசித்து வருபவர் முஸ்தபா என்ற 85 வயது முதியவர் இறைச்சிக்கடை உரிமையாளராக உள்ளார். இவரது மனைவி குர்ஷித் பேகம் கடந்த 2 வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 9 பிள்ளைகள் இருந்த நிலையில் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

குர்ஷித் பேகம் இறந்த பின்பு முஸ்தபா தனிமையில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தனக்கு ஒரு துணை தேவை என்று உணர்ந்தார்.இதையடுத்து அவர் அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்த பாத்திமா பேகம் என்ற 65 வயது மூதாட்டியை சந்தித்தார்.

இதனிடையே உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்று பாத்திமா பேகமிடம், முஸ்தபா கூறினார். முதிர்ந்த வயதில் இது தேவைதானா? என்று பலரும் கிண்டல் செய்த நிலையில், முஸ்தபாவின் காதலை பாத்திமா பேகம் ஏற்றுக் கொண்டார்.

மேலும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். இவர்களது திருமணத்திற்கு முஸ்தபாவின் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். மேலும் அவர்களே முன்னின்று முஸ்தபாவுக்கும், பாத்திமா பேகத்திற்கும் திருமணம் நடத்தி வைத்தனர். கொரோனா பரவல் காரணமாக இவர்களது திருமணம் முஸ்தபாவின் வீட்டில் எளிமையான முறையில் நடந்தது. இந்த தம்பதியினருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.