நீட் தேர்வில் முறைகேடு- மாணவி உள்பட 8 பேர் அதிரடி கைது

neetexam cheatingneetexam
By Petchi Avudaiappan Sep 14, 2021 09:11 PM GMT
Report

ராஜஸ்தானில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதனிடையே ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி வளாகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில் தேர்வு தொடங்கியதும் தேர்வறை கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பேருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளனர்.

அந்த நபர்கள் சிகார் பகுதியில் வேறு சிலருக்கு வினாத்தாளை அனுப்பி அவர்கள் மூலம் சரியான விடைகளைப் பெற்றுள்ளனர். அங்கிருந்து முகேஷுக்கு விடைகள் கிடைக்க அதனை வாட்ஸ்-அப் மூலம் பெற்ற ராம் சிங், தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக ரூ.35 லட்சம் பேரம் பேசப்பட்டு தேர்வுமைய வளாகத்திலேயே ரூ.10 லட்சம் கைமாறியுள்ளது. இதையடுத்து தேர்வு மைய அதிகாரி, மாணவி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.