50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை ராகுல் காந்திக்கு எழுதி வைத்த 78 வயது மூதாட்டி

rahulgandhi Uttarakhand
By Irumporai Apr 05, 2022 03:24 AM GMT
Report

டேராடூனில் வசிக்கும் புஷ்பா முன்ஜியால் என்ற மூதாட்டி,காங்கிரஸ் தலைவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக கூறி,ராகுல் காந்தியின் பெயருக்கு வீடு, தங்க ஆபரணங்கள் உட்பட தனது முழு சொத்தையும் எழுதி வைத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டியான புஷ்பா முன்ஜியால்,50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள்,10 டோலா தங்கம் உட்பட தனது சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரில் வைத்துள்ளார்.

புஷ்பா முன்ஜியால்,டேராடூன் நீதிமன்றத்தில்,தனது சொத்துக்களின் உரிமையை நேற்று ராகுல் காந்திக்கு அளித்து உயிலை தாக்கல் செய்துள்ளார். இதற்கான காரணம் குறித்து புஷ்பா முன்ஜியால் கூறுகையில்,”இந்திரா காந்தியும்,ராஜீவ் காந்தியும் இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.

அந்த வகையில்,தற்போது சோனியா காந்தியும்,ராகுல் காந்தியும் தேச சேவைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். மேலும்,ராகுல் காந்தி மற்றும் அவரது யோசனைகள் நாட்டுக்கு அவசியம் எனவேதான்,ராகுல் காந்தியின் எண்ணங்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

அதனால்தான் எனது சொத்துக்களை அவருக்கு வழங்குகிறேன்”,என்று புஷ்பா முன்ஜியால் கூறியுள்ளார். இதனையடுத்து,உத்தரகாண்ட் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பிரீதம் சிங்கின் வீட்டில் வைத்து புஷ்பா முன்ஜியால் தனது சொத்துக்களுக்கான ஆவணங்களை வழங்கினார்.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.ஆனால்,பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியேற்றது. இதனிடையே,உத்தரகாண்ட் மாநிலத்தில் ராகுல் காந்தி பல பேரணிகளை நடத்தினார்.

 ஒரு பேரணியின் போது ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை ‘ராஜா’ என்று குறிப்பிட்டு தாக்கினார்.அதாவது “டெல்லியில் பிரதமர் இல்லை.டெல்லியில் ஒரு ராஜா அமர்ந்திருக்கிறார்.

அப்படியொரு அரசு எங்களுக்கு வேண்டாம். ஏழைகள், விவசாயிகள்,சிறுதொழில் செய்பவர்கள்,எம்எஸ்எம்இ-யில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இளைஞர்கள்,மக்களுக்கு வேலை வழங்கும் அரசுதான் எங்களுக்கு வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,ராகுல்காந்தியின் யோசனைகள் நாட்டுக்கு அவசியம் எனக்கூறி உத்தரகாண்ட் மூதாட்டி தனது சொத்துக்களை ராகுல்காந்தி பெயருக்கு மாற்றியுள்ளார்.