73 வயது மூதாட்டியை திருமணம் செய்வதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி
73 வயது மூதாட்டியை திருமணம் செய்வதாக கூறி, 63 வயது முதியவர் ரூ.57 லட்சம் மோசடி செய்துள்ளார்.
ஆசை வார்த்தை கட்டிய முதியவர்
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தின் டோம்பிவ்லி பகுதியில் வசித்து வரும் 73 வயதான மூதாட்டி ஒருவர், செய்தித்தாளில் திருமண வரன் தொடர்பான விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.
இதில், 62 வயதான நபர் ஒருவர் திருமணம் செய்துகொள்ள பெண் தேவை என குறிப்பிட்டிருந்தார்.
அந்த விளம்பரத்திலிருந்த தொலைப்பேசி எண்ணை எடுத்த மூதாட்டி, அந்த நபரை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
மூதாட்டியிடம், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளாலாம் என 62 வயது முதியவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
ரூ.57 லட்சம் மோசடி
மேலும், புனேவில் நாம் இருவரும் திருமணத்திற்கு பிறகு இணைந்து வாழ ஒரு வீடு வாங்க உள்ளேன், அதற்கு ரூ.35 லட்சம் கொடுத்து உதவும்படி கேட்டுள்ளார்.
அவரின் ஆசை வார்த்தையில் மயங்கிய மூதாட்டியும் அந்த நபர் கேட்டபடி, ரூ.35 லட்சம் வழங்கியுள்ளார். அந்த பணத்தின் மூலம், வீடு வாங்கியதாக போலியான ஆவணங்களை மூதாட்டியிடம் வழங்கியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, மூதாட்டியின் வீட்டில் சில காலம் தங்கியிருந்த அவர், ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும், டெபிட் கார்டை திருடி அதிலிருந்து ரூ.2.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளார்.
இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி, இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணு நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 62 வயது முதியவரை தேடி வருகின்றனர்.