7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : பள்ளி தலைமையாசிரியர் மீது பெற்றோர் புகார்!
நாகை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியர்: பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் ஊராட்சி காருகுடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 8 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர்.
இரு ஆசிரியர்களை கொண்ட பள்ளியில் வேதாரண்யம் அடுத்துள்ள தகட்டூரை சேர்ந்த தமிழ்செல்வன்(58) பள்ளி தலைமையாசிரியராகவும் ஆசிரியராக தேவகி(47) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
மது போதையில் பள்ளி வந்த தலைமையாசிரியர் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் குளத்தில் தள்ளி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பெற்றோர்களிடம் சொல்லத் தயங்கிய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.இது குறித்து தனது மகளிடம் தாயார் நடந்தவற்றை விசாரித்ததில் பள்ளித் தலைமையாசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து புகார் அளிக்க சென்ற இவர்களிடம் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் குழந்தைகள் சேவை அமைப்பு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் நேரடியாக சிறுமியின் பெற்றோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் இந்த பிரச்சினை தொடர்பாக திருக்குவளை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக நாகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் தலைமையாசிரியர் தமிழ்செல்வன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
மேலும் அப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் தேவகியை கீழ்வேளூர் அருகே உள்ள இரிஞ்சியூர் பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
நாகை அருகே 7 வயது பள்ளி மாணவிக்கு மது போதையில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.