ஆன்லைன் நண்பனை நம்பி சென்ற சிறுமி - கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 7 மாணவர்கள்
கோவையில் 17 வயது சிறுமியை 7 கல்லூரி மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
17 வயது சிறுமி
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கியும் குற்றங்கள் குறையவில்லை.
இந்நிலையில் கோவையில் 17 வயது சிறுமி 7 கல்லூரி மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமை
கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என அவரது பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பின்னர் மறுநாளே சிறுமி வீடு திரும்பியுள்ளார். சிறுமியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி சமூகவலைத்தளம் மூலம் கல்லூரி மாணவர் ஒருவரிடம் பழகியுள்ளார்.
அந்த மாணவர் ஆசை வார்த்தை கூறி குனியாமுத்தூர் பகுதியில் தனது அறைக்கு வரவழைத்துள்ளார். அங்கிருந்த 7 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து, சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உக்கடம் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜெபின் (20), ரஷித் (19), அபினேஸ்வரன் (19), தீபக் (20), யாதவ் ராஜ் (20), முத்து நாகராஜ் (20), நித்திஷ் (19) ஆகிய கல்லூரி மாணவர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர்.