7 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்....முந்துவது யார்..I.N.D.I.A vs பாஜக..?
கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
சாண்டி உம்மன் முன்னிலை
இதில் கேரளா மாநிலத்தின் புதுப்பள்ளியில் மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் எளிதில் வெற்றி பெரும் நிலையில், மற்ற வேட்பாளர்களை விட அதிக முன்னிலையில் உள்ளார். 10வது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, காங்கிரஸ் வேட்பாளரான சாண்டி உம்மன் ஏற்கனவே தனது போட்டியாளரான CPI(M) கட்சியை சேர்ந்த ஜெய்க் C தாமஸை விட சுமார் 37,000 வாக்குகள் முன்னிலை பெற்றிருக்கிறார்.
அதே போல, மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள துப்குரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ளது. இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் தபசி ராய் 1,085 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்மல் சந்திர ராய் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் ஆதரவுடன் சிபிஐ(எம்) வேட்பாளர் ஈஸ்வர் சந்திர ராய் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
UP'யில் பலப்பரீட்சை
உத்தரபிரதேசத்தில் கோசி சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 4,067 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரான தாரா சிங் சவுகானை விட முன்னிலை பெற்றுள்ளார்.சுதாகர் சிங் தற்போது வரை 14,286 வாக்குகளையும்,சௌஹான் 10,219 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இந்த தொகுதியின் வெற்றி வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மிக முக்கியமானதான ஒன்று என்பதால் இரு கட்சிகளும் வெற்றிக்காக காத்துள்ளனர்.
திரிபுராவில் பாஜக வெற்றி
திரிபுரா மாநிலத்தின் செபஹிஜாலா மாவட்டத்தில் உள்ள தன்பூர் மற்றும் போக்ஸாநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்ஸாநகர் தொகுதியில், பாஜகவின் தஃபஜ்ஜால் ஹொசைன் 30,237 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அந்த தொகுதியில் 66% சிறுபான்மை வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தன்பூர் தொகுதியிலும் பாஜக வேட்பாளர் பிந்து தேப்நாத் 18,871 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேப்நாத் 30,017 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ(எம்) வேட்பாளர் கவுசிக் சந்தா 11,146 வாக்குகளும் பெற்றனர்.
ஜார்க்கண்ட் - உத்திரகாண்ட் நிலவரம்
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்திலுள்ள தும்ரி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் JMM வேட்பாளர் பேபி தேவி AJSU கட்சியின் வேட்பாளரான யசோதா தேவியை விட 1,341 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
உத்திரகாண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜகவின் வேட்பாளர் பார்வதி தாஸ் முன்னிலை வகிக்கின்றார். 10 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு,
பா.ஜ.கவின் பார்வதி தாஸ் 25,094 வாக்குகளும், காங்கிரஸின் பசந்த்குமார் 23,053 வாக்குகளும், உத்தரகாண்ட் கிராந்தி தளத்தின் அர்ஜுன் குமார் தேவ் 630 வாக்குகளும், சமாஜ்வாதி கட்சியின் பகவதி பிரசாத் 490 வாக்குகளும், உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சியின் பகவத் கோஹ்லி 209 வாக்குகளும் பெற்றுளளனர்.