மாண்டஸ் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெருங்கும் மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. இன்று இரவு புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 5ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது.
பின்னர் வட-மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் சென்னையில் இருந்து 270 கிமீ தொலையில் உள்ளது.இதையடுத்து காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 270 கிமீ துாரத்திலும், காரைக்காலில் இருந்து 200 கிமீ துாரத்தில் நிலவி வருகிறது. இதனால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மோசமான வானிலை நிலவுகிறது.
மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
துாத்துக்குடிக்கு இரு மார்க்கமாக செல்லும் விமானங்கள் மற்றும் கொழும்பு, துாத்துக்குடி, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காற்றின் வேகம், மழை அளவை பொறுத்து மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.