கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத திமுக நிர்வாகிகள் : கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம்
கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத திமுகவை சேர்ந்த 7 நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை எற்படுத்திய நிலையில் கூட்டணி கட்சிகளின் இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர்கள்,
உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
எனினும் கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுக் கொடுக்காமல் இருந்துவந்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து தற்போது அதிரடியாக நீக்கயுள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் பேரூர்க் கழகச்செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தருமபுரி கிழக்கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூர்க் கழக செயலாளர் உதயகுமார்,
பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச்சேர்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமார், தஞ்சை வடக்கு மாவட்டம்,
வேப்பத்தூர் பேரூர்க்கழக துணைச்செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.ராஜதுரை ஆகியோர் கழகக்கட்டுப்பாட்டை மீறியும்,
கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப்பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.