அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 7 பேர் பலியான பரிதாபம்
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் 20 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்தின் 18வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
வீட்டில் பரவிய தீ மளமளவென அந்த தளம் முழுக்க பரவியது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 13 தீயணைப்பு வாகனங்களில் சென்ற மும்பை தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் புகை மண்டலமாக மாறியதால் தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பலரையும் மீட்ட நிலையில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.