கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் - திணற திணற சாப்பாடு போட்டு சிறுமியை கொன்ற பெண்
கடனை திருப்பி கேட்டதால் சிறுமியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 லட்சம் கடன்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் அசன்துல்லா - சானியா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் அஸ்வியா என்ற மகள் இருந்தார்.
ரேஷ்மா என்ற பெண்ணுக்கு அசன்துல்லா 3 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால், வாங்கிய கடனுக்கு வட்டியை கூட கட்டாமல் ரேஷ்மா இருந்துள்ளார். இதனால் ரேஷ்மாவிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
சிறுமி கொலை
கடந்த 1 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அஸ்வியா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்து அஸ்வியா கிடைக்காத நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை புர்கா அணிந்த பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்வதை காண முடிந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் ரேஷ்மாவிடம் நடத்திய விசாரணையில், கடனை திருப்பிக் கேட்டதால், தனது தாய் ஹசீனா மற்றும் சிறுவனுடன் இணைந்து அஸ்வியாவை கொன்று ஏரியில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அஸ்வியாவை வீட்டிற்கு அழைத்து வந்து, மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு சாப்பாடு போட்டு கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ரேஷ்மா, அவரது தாய் மற்றும் சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.