6 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு சூடு வைத்த ஆசிரியை - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் கணவரை இழந்தவர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 6 வயதான மகள் சற்று மன வளர்ச்சி குன்றியவர். கடந்த 4-ம் தேதி பெரம்பூரில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான தனியார் பள்ளியில் மகளை திவ்யா சேர்த்துள்ளார்.
சிறுமியின் தாத்தா கலைச்செல்வன் காலையில் பள்ளியில் பேத்தியை விட்டுவிட்டு மதியம் அழைத்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் சிறுமியை தாத்தா பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது ஆசிரியர், சிறுமியின் உடம்பில் தீக்காயங்கள் இருந்ததைப் பார்த்து, தீக்காயத்துடன் ஏன் பள்ளிக்கு அழைத்து வருகிறீர்கள் என்று தாத்தாவிடம் கேட்டுள்ளார்.
என் பேத்திக்கு வீட்டில் யாரும் சூடு வைக்கவில்லை. பள்ளியில்தான் சூடு வைத்துள்ளார்கள் என்று ஆசிரியரிடம் தாத்தா கலைச்செல்வன் வாக்குவாதம் செய்துள்ளார்.
உடனே சிறுமியின் தாய் திவ்யா பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆசிரியர்களுடன் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில் திவ்யா வகுப்பறையில் இருந்த கண்ணாடி ஜன்னல்களை அவர் தலையால் முட்டி உடைத்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். உடனே, சிறுமியை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் தாய் திவ்யா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
