துாங்கி கொண்டிருந்தவர்களின் 6 உயிர்களை கொன்ற கொசுவர்த்தி - மக்களே உஷார்..!
டெல்லியில் கொசுவர்த்தி சுருளால் மூச்சு விட முடியாமல் துாக்கத்திலேயே பிரிந்த 6 உயிர்களால் பெரும் சோகம் எழுந்துள்ளது.
6 பேர் உயிரிழந்தனர்
நம்மில் பெரும்பாலானோர் இரவு நேரங்களில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டு துாங்குவது வழக்கம்.
இந்த நிலையில் டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளிவந்த நச்சு வாயு காரணமாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த 6 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாஸ்திரி பூங்கா அருகே வசிக்கும் குடும்பத்தினர் நேற்று இரவு கொசுவர்த்தியின் ஏற்றிவைத்து துாங்கியுள்ளனர். அப்போது கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்ததில் தீப்பற்றி அறை முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
போலீசார் விசாரணை
நச்சுத்தன்மை கொண்ட புகை வெளியேற வழி இல்லாததால், துாக்கத்தில் இந்த நச்சு வாயுவை சுவாசித்த 4 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் கூறிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.