அந்தமானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்; திருச்செந்துாரில் உள்வாங்கிய கடல் - மக்கள் அச்சம்
அந்தமான் - நிகோபார் தீவுகளில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்துாரில் கடல் உள்வாங்கியது.
அந்தமானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்
அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6வது முறையாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இன்று அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6ஆகப் பதிவு ஆகியுள்ளது.

முன்னதாக, நேற்று பிற்பகல் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 3 மணியளவில் நிலநடுக்கம் அளவுகோலில் 4.1 ரிக்டர் ஆக பதிவாக,
அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், 4.9, 3.9, 5.5 என அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவு செயப்பட்டுள்ளது.
உள்வாங்கிய கடல்
இந்த நிலையில், துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவில் முன் உள்ள கடல் நேற்று திடீரென உள்வாங்கியது.

வழக்கமாக திருச்செந்துார் கடல் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கடல் நீர் உள்வாங்கும். வழக்கத்திற்கு மாறாக 100 அடி துாரத்திற்கும் மேலாக நேற்று கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது.
இதனால் பாறைகள், கடற்பாசிகள் வெளியே தெரிந்தன.
இதனால் நேற்று பக்தர்கள் கடற்பாசி பாறைகள் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.