5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை கைது
மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ் - கார்த்திகை செல்வி தம்பதிக்கு 5 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
அதில் ஒரு குழந்தையான சாய் தீப்தி, ராமநாதபுரத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்தபோது மாயமானார்.
குழந்தை காணவில்லை என குடும்பத்தினர் தேடியபோது, வீட்டின் பின்புறம் இருந்த உறை கிணற்றில் சிறுமி சாய் தீப்தி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் தாய்மாமாவின் மனைவி சபரிகா முன்னுக்குப் பின் முரணான பதில்களை கூறினார்.
தீவிர விசாரணையில் சபரிகாதான் சிறுமியை கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காதல் திருமணம் செய்ததால் கணவர் குடும்பத்தினர் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தனது மாற்றுத்திறனாளி குழந்தை புறக்கணிக்கப்பட்டதாகவும் சபரிகா போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கார்த்திகை செல்வியின் குழந்தைகள் மீது ஏற்பட்ட பொறாமை மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த கொலையை திட்டமிட்டு செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவத்தன்று அனைவரும் தூங்கிய பிறகு சாய் தீப்தியை தூக்கிச் சென்று முதலில் ரயில்வே தண்டவாளம் அருகே கொண்டு சென்றதாக கூறினார்.
பின்னர் அருகிலிருந்த உறை கிணற்றில் குழந்தையை வீசி கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து சபரிகாவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.