சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு - பக்தர்களுக்கு கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை
சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு
கேரளாவில் உள்ள பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதற்காக கடந்த 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
இதையடுத்து 17-ந் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இம்முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேரள தேவசம் போர்டு ஏற்படுத்தி வருகிறது.
சுகாதாரத்துறை எச்சரிக்கை
இதனிடையே சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சபரிமலை வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என கேரள சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.