காணும் பொங்கல்: சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாதலங்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இன்று காணும் பொங்கல் என்பதால் சென்னை மெரினாவில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடும் என்பதால் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொதுமக்களின் வசதிக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக மாநகர் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதன்படி மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், பெசன்ட் நகர் உள்பட சுற்றுலாப் பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
சென்னை, புறநகர் பகுதியான வண்டலூர் உயிரியல் பூங்கா, மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக வருவார்கள் என்பதால், வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று கிண்டி சிறுவர் பூங்காவும் இன்று திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.