உக்ரைன் அதிபரை கொல்ல சதி திட்டம்? - தேடுதல் வேட்டையில் 400 கூலிப்படைகள்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள். உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் ரஷ்யா- உக்ரைன் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை நேற்று பெலாரஸில் நடந்தது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வொளோதிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் பத்திரிக்கையான தி டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த அமைப்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நடத்தப்படுகிறது.
இந்த கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும்,
கூலிப்படையினருக்கு உக்ரைன் அதிபர் வொளோதிமிர் ஜெலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் அதிபரோடு அவரது மந்திரி சபையில் உள்ள மந்திரிகள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 உயர் அதிகாரிகளை கொல்லவும் ரஷ்யா உத்தரவிட்டு இருக்கிறது.
இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு இந்த கூலிப்படையினர் ஜெலன்ஸ்க்கியை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டு மருபுறம் உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்பி உள்ளது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, தன்னை கொல்வதுதான் ரஷ்யாவின் முதன்மை நோக்கம், அடுத்தது என் குடும்பம் என்றும்,
தன்னையும் தனது குடும்பத்தையும் அழித்துவிட்டால் நாட்டை அழித்து விடலாம் என்று ரஷ்யா கருதுவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.