4 வயது சிறுவனை பணத்திற்காக பீரோவில் அடைத்து கொடூரமாக கொலை - குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்வசந்த்
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் கடந்த ஜனவரி 21ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் திடீரென காணாமல் போனார்.
இதனையடுத்து, சிறுவனின் தாயார் சகாய சில்ஜா என்பவர் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை பதிவு செய்த போலீசார் சிறுவனை தேடி வந்தனர். அப்போது, 1 1/2 பவுன் நகைக்காக பக்கத்து வீட்டை சார்ந்த பார்த்திமா (35) வீட்டருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஜோகன் ரிஷியை தனது வீட்டுக்குள் கொண்டு சென்று கை கால்களை கட்டியதோடு சிறுவனின் முகத்தில் தலையணையை வைத்து, மேலே அமர்ந்து சிறுவனை கொலை செய்து தன் வீட்டில் பீரோவில் மறைத்து வைத்திருந்தது அம்பலமானது.
இதனையடுத்து, போலீசார் பாத்திமாவை கைது செய்தனர். இந்த கொலைக்கு மேலும் உதவியாக செயல்பட்டு சிறுவனை இரவோடு இரவாக கடலுக்குள் போட்டுவிடலாம் என்று ஆலோசனை கூறியதாக கூறப்படும் பாத்திமாவின் கணவர் சரோபி (38) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று 4 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து, குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறுவனை இழந்து வாடும் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்.
அப்போது, கொலை செய்யப்பட்ட சிறுவன் ஜோகன் ரிஷியின் பெற்றோர் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கூறினர்.