4 வயது சிறுவனை துடிக்க துடிக்க கொலை செய்து பீரோவில் அடைத்த கொடூரப் பெண் - அதிர்ச்சி சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட். இவர் தற்போது வெளிநாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா. இவர்களுக்கு ஜோகன் ரிஷி (4) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சகாய சில்ஜா கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக குழந்தைகளோடு வசித்து வந்தார்.
இந்நிலையில், சிறுவன் ஜோகன் ரிஷி 21-ம் தேதி மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில், தாயார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சிறுவன் மாயமான நேரம் கழுத்து மற்றும் கையில் தங்க நகைகள் அணிந்திருந்ததால் நகைக்காக கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமடைந்த போலீசார் பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்ற பெண் மீது சந்தேகமடைந்தனர்.
இதனையடுத்து, பாத்திமாவை 22ம் தேதி விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதற்கிடையில், சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடினர்.
அப்போது, பீரோவும் உடைந்தது. அப்போது பீரோவில், அந்தச் சிறுவன் வாய்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதைக்கண்ட பொதுமக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாத்திமாவின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு, அவரை உடனடியாக கைது செய்ய கோரி ஊரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் பாத்திமாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது விசாரணையில், ஒன்றரை சவரன் நகைக்கு ஆசைப்பட்டு, பாத்திமா மதியம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவனை அன்பாக அழைத்துள்ளார்.
பின்னர் சிறுவனை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று கை, கால்களை கட்டி தலையணையால் சிறுவனின் முகத்தில் அமுக்கி கொலை செய்துள்ளார்.
நகைகளை திருடி சிறுவனின் சடலத்தை பீரோவில் மறைத்து வைத்து, கணவருடன் சேர்ந்து இரவோடு இரவாக கடலில் வீச திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரிவித்தார்.
இதனையடுத்து பாத்திமா மற்றும் அவரது கணவர் சரோபியை போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவோடு இரவாக இரணியல் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பாத்திமாவை தக்கலை பெண்கள் சிறையிலும் அவரது கணவர் சரோபி ஐ நாகர்கோவில் கிளை சிறையிலும் அடைத்துள்ளனர்.
ஆசாரிப்பள்ளம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட சிறுவன் ஜோகன் ரிஷியின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.