அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்: கீழடி அகழாய்வில் அடுத்தடுத்து கண்டறியப்பட்ட 4 சிவப்பு நிற பானைகள்!
சிவகங்கை மாவட்டம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில் அடுத்தடுத்து நான்கு சிவப்பு நிற பானைகள் கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழடி என்ற ஒற்றைச் சொல் தமிழர்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. கீழடி அகழாய்வின் தொடக்கத்தின் முதலே அதிகளவு பேசப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்களால் கீழடி கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளதால் தமிழக அரசுகூடுதல் கவனம் செலுத்தி வருகிறது கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி முதல் தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தலைமையில் நடந்து வருகிறது.
கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், அஜய், ரமேஷ், காவ்யா உள்ளிட்டோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது வரை அகழாய்வில் கண்டறியப்பட்ட மூடியுடன் கூடிய பானை, உறைகிணறுகள், வரி வடிவ பானை ஓடுகள், சுடுமண் பகடை, கல் உழவு கருவி, வெள்ளி முத்திரை நாணயம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் அடுத்தடுத்து வெளி வருவதால் பலரும் கீழடி அகழாய்வு பணியை ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் வரும் செப்டம்பருடன் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், கீழடி அகழாய்வில் ஒரு குழியில் சிவப்பு நிற சிறிய பானை கண்டெடுக்கப்பட்ட நிலையில் அடுத்து ஒரு பெரிய அடர் சிவப்பு நிற பானை 60 செ.மீ உயரத்தில் கிடைத்தது.
அதன் அருகிலேயே தேமடைந்த நிலையில் மற்றொரு பானை கிடைத்தது.
அதேபோல் அதன் அருகில் கிண்ணம் போன்ற கருப்பு சிவப்பு நிற பானையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஒரே குழியில் அடுத்தடுத்து நான்கு சிவப்பு நிற பானைகள் கண்டறியப்பட்டது ஆய்வாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.