துணி துவைக்க சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி
திண்டுக்கல் அருகே துணி துவைக்க சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் என்.பாறைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அர்ச்சனா. இவர்களது ஊர் அருகே சந்தனவர்தினி என்ற ஆறு செல்கிறது. இன்று மாலை ஆற்றில் துணி துவைப்பதற்காக சக்திவேல், மனைவி அர்ச்சனா மற்றும் சக்திவேலின் அண்ணன் மகள் சத்தியாபாரதி, ஐஸ்வர்யா ஆகியோர் சென்றுள்ளனர்.
சக்திவேலுவும் அர்ச்சனாவும் துணி துவைத்துக் கொண்டிருந்த நிலையில் குழந்தைகள் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு குழந்தைகள் சென்றதால் அவர்களை காப்பாற்ற கணவன், மனைவி இரண்டு பேரும் ஆற்றில் குதித்துள்ளனர்.
இதனால் நீச்சல் தெரியாத நான்கு பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ஊர்மக்கள் ஆற்றில் இறங்கி நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.