ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் முக்கிய வீரர்களுக்கு சிக்கல் - 4 அணிகளின் ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் தொடரில் 4 அணிகளின் முக்கிய வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மெகா ஏலத்தில் பல வீரர்களும் மற்ற அணிகளால் வாங்கப்பட்டதால் இந்த தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக மாறியுள்ளது.
இதனிடையே போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணி வீரர்களும் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 அணிகளின் வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்களில் ஒருவரான ஆன்ரிச் நார்ட்ஜே இடுப்பு பகுதியில் உள்ள காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு மிகப்பெரிய தொகையாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்த தீபக் சஹார் காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். இதனால் அந்த அணி நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் உள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் என்ன செய்யப் போகிறார் என்றே தெரியவில்லை.
கடந்த சீசன்களில் மும்பை அணியின் மிடில் ஆர்டரில் சிறந்து விளங்கிய சூர்யகுமார் யாதவ் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பையின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால் காயத்தின் தீவிரத் தன்மை காரணமாக அவர் பல போட்டிகளில் விளையாட மாட்டர் என கூறப்படுகிறது.