குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் அபராதம் வசூல் தொகை இத்தனை கோடியா ? - சென்னை காவல்துறை அதிரடி
சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் ரூ.4.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விபத்துக்களைக் குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளை சென்னை பெருநகர காவல்துறை குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும்.
எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000 ஆக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. மேலும், நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை. மேலும் 7,667 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
காவல்துறை தகவல்
கடந்த ஒரு மாதத்தில் அழைப்பு மையங்களின் இதே போன்ற நடவடிக்கைகளால் 3,376 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.3.49 கோடி அபராத தொகை செலுத்தப்பட்டது. இதனால் ஐந்தாவது வாரத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 4,112 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.4.26 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
ஏற்கெனவே இது போன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 347 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை செயல்பாட்டில் உள்ளன என்று தெரிவித்துக் கொள்கிறோம்.' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.