4 கோடி எங்க ஹெச்.ராஜா... மீதி காசை கேட்கும் நெட்டிசன்கள்!

viral twitter hraja #4கோடிவீடு bjptamilnadu
By Irumporai Jun 23, 2021 10:27 AM GMT
Report

தேர்தல் செலவுக்காகக் கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஏமாற்றிவிட்டார் என அக்கட்சியின் நகரத் தலைவர் சந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார்.

பா.ஜ.க முன்னணித் தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் தனது தோல்விக்குக் கட்சி நிர்வாகிகள் சிலர்தான் காரணம் என ஹெச்.ராஜா கூறியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜ் மாநிலத் தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி உள்ளார்.

அவரது கடிதத்தில், “ஹெச்.ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமலும், சுயபரிசோதனை செய்து கொள்ளாமலும், தான் செய்த தவறை மறைப்பதற்காக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹெச்.ராஜா மீது காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில் தேர்தல் செலவுக்காகக் கட்சி மேலிடம் கொடுத்த பெருந்தொகையை, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா செலவழிக்காமல் சுருட்டிக்கொண்டார்

. தேர்தலில் ஜெயிப்பதற்கான எந்த முயற்சியிலும் அவர் ஈடுபடவே இல்லை. பணத்தைச் சுருட்டிவிட்டு இப்போது தொண்டர்கள் மீது பழியைப் போடுகிறார். இப்போது சுப்பிரமணியபுரத்தில் 4கோடி ரூபாய் மதிப்பில் ஹெச். ராஜா வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் என காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டு இணையத்தில் ட்ரெண்டானது . அதனை தொடர்ந்து இணைய வாசிகள் 4கோடி ரூபாய் மதிப்பில் ஹெச். ராஜா வீடு கட்டி வருவதை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.