68 வயதில் 3வது திருமணம் செய்த மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே!
68 வயதில் 3வது திருமணம் செய்துள்ளார் மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே.
ஹரீஷ் சால்வே
நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவர் 68 வயதான ஹரீஷ் சால்வே. இவர் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். பாகிஸ்தான் நீதிமன்றத்தால் உளவாளி என குற்றம் சாட்டப்பட்ட, இந்தியரான குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சால்வே வாதிட்டுள்ளார்.
மேலும் கடந்த 2002ம் ஆண்டு விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வழக்கில் நடிகர் சல்மான்கான் வழக்கிலும் ஆஜராகி வாதிட்டுள்ளார். இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், மும்பை உயர்நீதிமன்றத்தால் பின்னர் அவர் வழக்கில் இருந்து முழுவதும் விடுவிக்கப்பட்டார். ஹரீஷ் சால்வேக்கு முதலில் மீனாட்சி என்பவருடன் திருமணம் நடந்து, பின்னர் 30 ஆண்டுகள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு சாக்ஷி, சானியா என இரு மகள்கள் உள்ளனர்
3வது திருமணம்
இதனையடுத்து கடந்த 2020ம் ஆண்டு கரோலின் பிரஸ்சார்டு என்பவரை சால்வே 2-வது திருமணம் செய்து கொண்டார். இதுவும் பாதியில் முடிந்துவிட்டது. இந்நிலையில் சால்வே 3வது முறையாக, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் டிரினா என்ற பெண்ணை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நீத்தா அம்பானி, லலித் மோடி, அவருடைய காதலி மற்றும் மாடல் அழகியான உஜ்வாலா ராவத், ஸ்ரீபிரகாஷ் லோகியா, லட்சுமி மிட்டல், சுனில் மிட்டல் மற்றும் கோபிசந்த் இந்துஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.