இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் விடுதலை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் விடுதலை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது
அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், நெடுந்தீவு அருகே 15 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இதனையடுத்து, இலங்கை கைது செய்த மீனவர்கள் 38 பேரையும், 5 படகுகளை விடுதலை செய்ய மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க நவடடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
சிறையில் இருந்து விடுதலை
இந்நிலையில், இலங்கை சிறையில் இருந்த 38 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து மொத்தம் 67 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று 4 பேரும், இன்று 38 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 42 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விரைவில் அவர்கள் வீடு திரும்ப உள்ளனர்.