தமிழகத்தில் மருத்துவமனையை நாடிய 35 லட்சம் மக்கள் - என்ன காரணம்?
தமிழகத்தில் மழைக்கு பிறகு 35 லட்சம் பேர் மருத்துவமனையை நாடி இருப்பதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனியார் நிறுவனம் சார்பில் ஒரு நிமிட சுய இரத்தப் பரிசோதனை செய்யும் கருவி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டு கருவியை துவக்கி வைத்தனர்.
பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழகத்தில் குன்னூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் மதியம் 12.27 மணிக்கு விபத்துக்குள்ளானது. அந்த இடத்திற்கு 8 ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என அதன் மீட்பு பணிகள் குறித்து விவரித்தார்.
மேலும் கொரோனா இன்னும் தமிழகத்தை விட்டு போகவில்லை. ஒமிக்ரானை பொறுத்தவரையில் இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து 13 பேர் இதுவரை தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல் மழை காலங்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு வயிற்று போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகளால் அதிகளவில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த பிரச்னையால் வந்துள்ளார்கள். குடிநீரில் சாக்கடை கலந்துள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.