தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி?

V. Senthil Balaji DMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jul 01, 2026 12:30 PM GMT
Report

தவெக எம்.எல்.ஏக்கு ரூ.35கோடி வழங்க முன்வந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்துள்ளது. 

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? | 35 Cr Offered To Tvk Mla Links To Senthil Balaji

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணையும் சூழலில், முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதே போல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க வைகோவுடன் இணைந்து முதல்வர் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாவும், முதல்வர் விஜய் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேவேளையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணி வைத்து ஆட்சியமைக்க முயற்சித்ததாகவும், தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெறுவதாகவும் தவெக அமைச்சர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், தவெக ஆட்சியை கவிழ்க்க தவெக எம்.எல்.ஏ.க்களை வேறு கட்சியில் இணைக்க முயற்சித்த 4 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? | 35 Cr Offered To Tvk Mla Links To Senthil Balaji

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக IDPS என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தும் திருநாவுக்கரசு, அவருக்கு துணையாக இருந்த நரேஷ், தியாகராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

தவெக எம்.எல்.ஏக்கு ரூ.35 கோடி பேரம்

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான Dr.N.இளையராஜா அவர்களை சில தினங்களுக்கு முன்பு கைபேசியில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்ற நபர் தான் Indian Political Democratic Strategies (IPDS) என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன்பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஆனால், தான் வேறு பணியில் இருப்பதாகக் கூறி திரு.இளையராஜா தொடர்பை துண்டித்துள்ளார். 

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? | 35 Cr Offered To Tvk Mla Links To Senthil Balaji

ஆனால், மீண்டும் தொடர்பு கொண்ட மேற்படி திருநாவுக்கரசு, திரு.இளையராஜாவிடம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும், அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் சொல்லும்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திரு.இளையராஜா எனக்கு விருப்பமில்லை, இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறியபோது, தான் பேசியது குறித்து வெளியே தெரிவித்தால் திரு.இளையராஜாவும், அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டியுள்ளார்.

இதனால் சட்டமன்ற உறுப்பினர் Dr.N.இளையராஜா அவர்கள் 29.06.2026 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தன்னிடம் தனது மக்கள் பணியை செய்யக் கூடாது என்பதற்காகவும், தனது பேச்சுக்கு உடன்பட லஞ்சம் தர முயற்சித்ததோடு தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

அப்புகாரின்பேரில், Dr திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணையின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியை சேர்ந்த நரேஷ். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், புலன் விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு.V.செந்தில்பாலாஜியின் சகோதரர் திரு.V.அசோக்குமார் என்பவர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரி நரேஷை சென்னையில் சந்தித்ததும், திரு V.செந்தில்பாலாஜி மற்றும் திரு.V.அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே எதிரி திருநாவுக்கரசு வழக்கின் புகார்தாரரான சட்டமன்ற உறுப்பினர் திரு.இளையராஜாவை தொடர்பு கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும், இவ்வழக்கில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என தெரிவித்துள்ளது.

அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்

இது குறித்து பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் உத்தரவின் பேரில் செந்தில்பாலாஜி போன்ற ஆட்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டு பல கோடிகளைத் தருவதாக பேசுகின்றனர். 

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? | 35 Cr Offered To Tvk Mla Links To Senthil Balaji

இன்று ஒரு எம்.எல்.ஏவின் புகாரின் பேரில் குதிரை பேரம் பேசியவர்களைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. இதனால்தான் மு.க.ஸ்டாலின் 30 நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடுமென சொல்கிறார்" என பேசியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.