ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் பலி - கென்யாவில் நடந்த சோக சம்பவம்
கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 31 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன் தலைநகர் நைரோபியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம் ஒன்றின் பாடகர் குழுவினர் பேருந்து ஒன்றில் சென்றனர்.
கிடுய் கவுண்டியில் உள்ள என்சியூ என்ற ஆற்றின் பாலத்தின் மீது வேகமாக ஓடிய வெள்ள நீரை பேருந்து கடந்து செல்ல முயற்சித்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து மீட்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகினர்.
மேலும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.