மற்றொரு சம்பவம் - 300 அடி உயர நந்திமலையில் தவறி விழுந்து மலையிடுக்கில் சிக்கிய இளைஞர் - போராடி மீட்ட விமானப்படை
பெங்களூர், சிக்பள்ளாப்பூருக்கு அருகில் நந்தி கிராமம் உள்ளது. இந்த நந்தி கிராமத்தில் ‘நந்திமலை’ அமைந்துள்ளது. இந்த மலை மிகவும் பிரசித்திப் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த மலைக்கு ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.
நேற்று, கொல்கத்தாவை சேர்ந்த நிஷாந்த் என்ற 19 வயது இளைஞர் தனது உறவினர்களுடன் நந்திமலைக்கு வந்துள்ளார். அப்போது, நந்திமலை அடிவாரத்திலிருந்து வனப்பகுதி வழியாக மலையின் உச்சிக்கு நிஷாந்தும், அவரது உறவினர்களும் மலையேறினர்.
அப்போது சுமார் 300 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று மலையிலிருந்து நிஷாந்த் தவறி பள்ளத்தில் விழுந்தார். இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செய்வதறியாது உறவினர்கள் கதறி துடித்தனர்.
இதனையடுத்து நிஷாந்த் செல்போன் மூலம் உறவினர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு, நான் ஒரு மரத்தில் சிக்கிக் கொண்டதாகவும், என்னை உடனடியாக காப்பாற்றுமாறும் கூறினார்.
இது குறித்து சிக்பள்ளாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினர், நந்திமலையைச் சுற்றி தவறி விழுந்த இளைஞரை தேடினர். நிஷாந்த் கண்ணுக்கு தென்படவில்லை.
இதனையடுத்து, சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் லதா, மாநில அரசை தொடர்பு கொண்டு பேசி நிஷாந்தை மீட்க ஹெலிகாப்டரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன் பின்பு, ராணுவ ஹெலிகாப்டரை கர்நாடக அரசு, நந்திமலைக்கு அனுப்பி வைத்தது. அந்த ஹெலிகாப்டரில் சென்ற ராணுவ வீரர்கள், பள்ளத்தில் தவறி விழுந்த நிஷாந்தை தேடினர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு, மரத்தில் சிக்கிக் கொண்டிருந்த நிஷாந்தை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் ராணுவ வீரர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிஷாந்தை பத்திரமாக மீட்ட ராணுவ வீரர்களுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.