டெல்லி தீ விபத்து - பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு; 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் கெஜ்ரிவால்!
டெல்லி கட்டிட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியின் மேற்கு பகுதியில், முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 3 மாடி வணிகக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், பிரதமர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.
அந்தவகையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என தெரிவித்திருந்தார்.
#WATCH | Fire near Mundka metro station, Delhi: 1 woman dead in the fire. Rescue operation continues with about 15 fire tenders at the spot, as per DCP Sameer Sharma, Outer district pic.twitter.com/okHUjGE7cn
— ANI (@ANI) May 13, 2022
மேலும், டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி வணிக வளாகம் தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு சென்று முதல்வர் ஆய்வு செய்த பிறகு நிவாரணம் அறிவித்தார்.