நடிகை ரோஜாவால் கம்பி எண்ணும் 3 இளைஞர்கள்... புஷ்பா பாடலுக்கு நடனமாட வைத்ததால் வந்த வினை
புஷ்பா படத்தின் பாடலுக்கு நடிகையும்,எம்எல்ஏவுமான ரோஜா நடனமாடுவது போல் மார்ஃபிங் வீடியோவை வெளியிட்ட 3 இளைஞர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படத்தில் நடிகை சமந்தா ஆடிய “ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா” என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது.
யூட்யூபில் தற்போது வரை ஆறரை கோடி பேருக்கு மேல் பார்த்துள்ள இந்த பாடலை பலரும் தங்களது திறமைகளை பயன்படுத்தி வர் சாங், ரீ கிரியேட் என புதுமை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த பாடலுக்கு ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ வாக இருக்கும் நடிகை ரோஜாவின் உருவத்தை மார்ஃபிங் செய்து நடனம் ஆடுவது போல சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டனர்.
இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்ட நிலையில் இதைக்கண்ட நடிகை ரோஜா அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மார்ஃபிங் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் நகரியின் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரமேஷ், டெல்லி, சக்கரபாணி ஆகிய 3 பேரை திருப்பதியில் வைத்து கைது செய்துள்ளனர்.