பிராவோவை கழட்டி விட தயாராகும் சென்னை அணி - காத்திருக்கும் 3 அணிகள்
அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோவை 3 அணிகள் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளது. அதேசமயம் வீரர்களுக்கான மிகப்பெரிய ஏலமும் நடக்கவுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ட்வைன் பிராவோவை சென்னை அணி விடுவித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அந்த அணியில் பல சிறந்த வீரர்கள் இருப்பதால் இவரை சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளாது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிராவோவை 2022 ஐபிஎல் தொடரில் மூன்று அணிகள் தங்களது அணியில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டு வருகிறது. முதலாவதாக டெல்லி அணி 2021 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்று வரை வந்தது. டெல்லி கேப்பிடல் அணியில் என்னதான் சிறந்த ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் பிராவோ இணைவது அணிக்கு கூடுதல் பலம் தான்.
அடுத்ததாக கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பிராவோவை தனது அணியில் இணைப்பதற்கு முயற்சியெடுக்கும் என கூறப்படுகிறது. பிராவோ போன்று ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் அந்த அணியில் இல்லை என்பதால் அணி நிர்வாகம் முழு முயற்சியெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவதாக 2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவுத் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிசை 16.5 கோடி ஏலத்தில் தனது அணியில் இணைத்துக் கொண்டது ஆனால் கிறிஸ் மோரிஸ் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இதனால் பிராவோவை ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளது.