கிறிஸ் கெய்லுக்கு இப்படி ஒரு நிலைமையா? - பஞ்சாப் அணியை விட்டு வெளியேற்றப்படுவதால் ரசிகர்கள் சோகம்
அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை வெளியேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளது. அதேசமயம் வீரர்களுக்கான மிகப்பெரிய ஏலமும் நடக்கவுள்ளது.இதில் பஞ்சாப் அணி தக்க வைக்கவுள்ள 3 வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழும் கே எல் ராகுலை அணி நிர்வாகம் ஒரு பொழுதும் விட்டுக் கொடுக்காது. 2021 ஐபிஎல் தொடரில் சிறந்த வீரராக செயல்பட்ட கே.எல்.ராகுல் 13 போட்டிகளில் பங்கேற்று 626 ரன்கள் அடித்து அதிகமான ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 3வதாக இடம்பெற்றார். இவரைத் தான் 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி முதல் ஆளாக தக்கவைக்க அதிக வாய்ப்புண்டு.
2வதாக 2021 ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுலைப் போல 12 போட்டிகளில் பங்கேற்று 441 ரன்கள் அடித்த மற்றுமொரு நட்சத்திர வீரர் மயங்க் அகர்வால் தான் அணி நிர்வாகத்தின் தேர்வாக இருக்கக்கூடும்..
3வதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தான் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். 2021 சீசனில் இவர் 13 போட்டிகளில் பங்கேற்று 19 விக்கெட்களை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணியின் சில வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இந்நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முகமது சமி பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்கவைத்துக்கொள்ள படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பஞ்சாப் அணியில் இருக்கும் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அணியில் இருந்து கழட்டி விடப்படுவார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.