கழிவு நீர் தொட்டியை திறந்து பார்த்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு
கரூரில் கழிவுநீர் தொட்டியை திறந்து பார்த்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஷவாயு தாக்கி தொழிலாளிகள் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில், குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்த வீட்டின் பின் புறத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்து முடிந்துள்ளது. அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் மரங்கள் பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது தொழிலாளர்கள் மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சத்தமிட்டவாறு மயக்கம் அடைந்து விழுந்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இவர்களின் சத்தம் கேட்டு அங்கு சென்ற மற்றொரு தொழிலாளியான சிவா என்பவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் அங்கு வந்து பார்த்த மற்ற தொழிலாளிகள் 3 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.