பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் : பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
பள்ளி வாகனம் மோதி 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் இயங்கி வரும் வெங்கடேஸ்வரா என்ற தனியார் பள்ளியில் தீக்ஷித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் பள்ளி வளாகத்தின் உள்ளே பள்ளி வேன் மோதி கடந்த சில வாராங்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்து குறித்து வாகன ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரித்து வந்தனர். பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதில் ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டார்.
போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவன் உயிரிழப்புக்கு காரணமான வாகனத்தை தடயவியல் சோதனை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக விபத்து ஏற்படுத்திய பள்ளி வேன் டிரைவர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி(34), ஆகிய இரண்டு பேரை கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
பள்ளியின் தாளாளர் ஜெயா சுபாஷ் பள்ளியின் முதல்வர் தனலட்சுமி ஆகிய 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர் உள்பட 3 பேரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.