ஒரு தலைவன் உருவாகிவிட்டானா ? மாணவன் முதல் தளபதி வரை .. 29YearsOfVijayism
இன்றைய சினிமா உலகில் தியேட்டரில் இருந்து ஓடிடி நோக்கி வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஓடிடி திரைக்காக இனி படங்கள் தயாராகும் என்பதால் மாஸ் ஹீரோ பில்ட்அப்கள், பன்ச் டயலாக்குகள், ஓப்பனிங் பாடல்கள் என்கிற கான்செப்ட் சினிமாவில் இருக்காது என்பதே பலரின் கணிப்பு.
ஆனால், அதனை தகர்த்தெறிந்து எம்ஜிஆர், ரஜினி வரிசையில் இந்தத் தலைமுறையின் உச்ச நட்சத்திரமக உயர்ந்துள்ளார் (தளபதி) விஜய்.
''ஒரு குழந்தை உருவாக பத்து மாசம், ஒரு பட்டதாரி உருவாக 3 வருஷம், ஆனா, ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவை ‘மெர்சல்' படத்தில் விஜய்யின் மாஸான வசனம் இது , உண்மைதான்.
அந்த வசனம் போல தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஸ்டாராக உயர்வதற்கு விஜய்க்கு 28 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. 1992-ம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முதல் படியில் ஏறிய விஜய் இன்று உச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார்.
ஆனால் விஜய கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல , எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக கோலிவுட்டுக்குள் அடியெடுத்துவைத்த விஜய்க்கு யாரும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கவில்லை .
தயாரிப்பாளர்கள் யாரும் இவரை(விஜய்) ஹீரோவாக வைத்து படம் எடுக்க முன்வராத நிலையில் அப்பாவே தயாரிப்பாளரானார். 1992 ல் நாளைய தீர்ப்பு படம் வெளியான போது ஒரு பிரபல நாளிதழ் இதெல்லாம் நடிப்பதற்கான முகமா ? என கடுமையாக விமர்சித்து எழுதியது.
அதன்பிறகு தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளியான படங்களில் இதெல்லாம் நான் நடித்தப் படங்களில் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை , மேலும் அவரது படங்களில் உங்கள் விஜய்', 'உங்கள் விஜய்' என்கிற எஸ்.ஏ.சி-யின் முயற்சிகள் திணிப்புகளாகவே இருந்தன.
இனி விஜய்க்கு சினிமாவில் எதிர்காலமே இல்லை சினிமா வட்டாரங்கள் கூறிய நிலையில் திருப்பு முனையாக அமைந்தது பூவே உனக்காக' இந்த படத்தில் இயக்குநர் விக்ரமனும், 'காதலுக்கு மரியாதை' படம் மூலம் ஃபாசிலும் விஜய்யின் ட்ராக்கையே மாற்றினார்கள்
. முதல்முறையாக 'பூவே உனக்காக' படத்துக்கு குடும்பங்கள் வந்தன. 'காதலுக்கு மரியாதை' இளைஞர் கூட்டத்தை விஜய்க்கு சேர்த்ததோடு, மக்கள் மனதிலும் பெரிய மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தது.
குறிப்பாக பூவே உனக்காக காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் வெளியான பாடல்கள் எல்லாம் ரேடியோவில் இளைஞர்களின் காதல் கீதமாய் மாறி போனது காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே என ரொமாண்டிக் அவதாரம் எடுத்துக்கொண்டிருந்த விஜய், ஃபன் லவிங் பாயாக ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடித்தார்.
நடிகர்த்திலகம் சிவாஜிகணேசனுடன் அவர் நடித்த இப்படம் விஜய்யின் திரைவாழ்க்கையில் மற்றுமொரு முக்கியத் திரைப்படமாக அமைந்தது. ஒன்ஸ்மோர் படத்தின் மூலம்தான் விஜய் சிம்ரன் கூட்டணியும் உருவாகி துள்ளாத மனமும் துள்ளும், நேருக்கு நேர், பிரியமானவளே, யூத் என தொடர்ந்தது.
விஜய்யை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு திரைப்படங்கள் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. அந்தவகையில் குஷி திரைப்படம் முக்கியமானது. ரசிகன் திரைப்படத்தில் விஜய்யிடம் இருந்த குறும்புத்தனத்தை அப்படியே குத்தகைக்கு எடுத்து தன் ஸ்டைலில் கொடுத்தார் எஸ்.ஜே.சூர்யா.
அதேபோல் 150 நாட்களுக்கும் மேல் ஓடிய பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஃபிரண்ட்ஸ், குஷி, கில்லி ஆகிய திரைப்படங்காளோடு சேர்த்து, மின்சாரக் கண்ணா, வசீகரா, ஷாஜகான், காவலன் போன்ற திரைப்படங்கள் எப்போதும் ரசிக்கும்வகையில் அமைந்தன.
நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து விஜய் ஹிட் கொடுத்த காலத்தில், குருவி, வில்லு, சுறா என தொடர்ச்சியாக திரைப்படங்கள் சரியாக போகாதபோது டக்கென ஆக் ஷனிலிருந்து முழுநீளக் காதல் படமாக காவலன் திரைப்படத்தைக் கொடுத்து தன் இமேஜை காத்துக்கொண்டார்.
அதேபோல் வேலாயுதம் திரைப்படம் கணிசமான வரவேற்புப் பெற்றதும் அடுத்து நடித்த நண்பன் திரைப்படம் குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக அமைந்தது. ஒரு ஆக் ஷன் ஹீரோவாக விஜய்யின் பரிணாம வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபட்டிருந்தாலும், அவரை சூப்பர் ஹீரோ ஸ்டைலிஷ் ஆக் ஷன் ஹீரோவாக்கிய பெருமை ஏ.ஆர்.முருகதாஸுக்கே சேரும்.
ஸ்லீப்பர் செல் என்ற ஒற்றை வார்த்தையினை தமிழ் ரசிகர்களுக்கு சொன்னது மட்டுமல்லாமல் அட்டகாசமாக திரைக்கதை அமைத்து துப்பாக்கியைக் கொடுத்தார். இந்த படம் விஜய்யின் திரைவரலாற்றில் அது எப்போதும் முக்கிய இடத்தில் இருக்கும் வகையில் அமைந்தது.
அடுத்ததாக இருவரும் கூட்டணியமைத்த கத்தி திரைப்படம் கதை பிரச்சனையில் சர்ச்சையானாலும் திரைக்கதை மற்றும் நடிகர்களின் தேர்வால் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. துப்பாக்கி வெடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் துணை நின்றதுபோல, கத்தியின் கூர்மைக்கு அனிருத் இருந்தார்.
ஆனால் மூன்றாவதாக கூட்டணி அமைத்த சர்கார் திரைப்படம் வணீக ரீதியாக வெற்றியடைந்தாலும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை. கதை விவகாரம் பூதாகரமாக வெடித்ததும் ஒரு காரணமானது.
ஒரு காலகட்டத்தில் மிகவும் அமைதியானவர் என்று பெயர்பெற்ற விஜய், அவர் திரைப்படங்களில் வரும் பாடல்கள் மூலம் சமூகக் கருத்துக்களை சொல்வதையும், அரசியலைப் பேசுவதையும் வழக்கமாக்கத் துவங்கியதை இயக்குநர்களும் பாடலாசிரியரும் புரிந்துகொண்டு செயலாற்றினர் என்பது திரையைத் தாண்டி விஜய்யை வெளியில் கொண்டுபோய் சேர்த்தது.
ஒவ்வொரு முறை அவர் மேடை ஏறி " என் நெஞ்சில் குடியிருக்கும் " என்று உணர்வுப்பூர்வமாக பேசுவதைக் கேட்க ரசிகர்களின் இதயக் கதவுகளை திறந்து வைத்தது. அதுமட்டும் அல்ல விஜய திரைப்படங்களில் வரும் அரசியல் கருத்துக்களும் திராவிட அரசியல் வளர்த்த முன்னோர்களின் பாதைதான்.
ஆனால் இதுபோன்ற கருத்துக்களை யார் சொல்கிறார்கள் என்பது முக்கியம். எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக விஜய்க்குத்தான் அது பொருந்திபோயிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
விஜயின் அரசியல் பேச்சு ஆரம்பித்தது 2008-ல் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் 'குருவி' படம் தொடங்கும் போதே விஜய்க்கும்- உதயநிதி தரப்புக்கும் உரசல் ஆரம்பித்தது. மே மாதம் வெளியான குருவி திரைப் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
உரசல் இன்னும் அடுத்தக்கட்டத்துக்குப் போனது. 2011 தேர்தலில் களமிறங்கப்போகிறோம் என எஸ்.ஏ.சி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேச, விஜய் மக்கள் மன்றத்துக்கென தனிக்கொடி ரெடியானது.
2008 ஜூன் 22-ம் தேதி அவரது பிறந்தநாளில் இந்தக் கொடியை அறிமுகம் செய்தார் விஜய். நீல வண்ணத்தில் விஜய்யின் படமும் 'உழைத்திடு, உயர்ந்திடு' என்கிற வாசகமும் இந்தக் கொடிக்குள் இருந்தது.
கட்சிக்கான முன்னோட்டம்தான் இந்தக் கொடியா என அப்போது விஜய்யிடம் கேட்டபோது, ''அரசியலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய மக்கள் இயக்க உறுப்பினர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள்.நான் பொதுவானவனாகவே இருக்க விரும்புகிறேன்'' என்றார் விஜய்.
அடுத்து இலங்கைப் போர் உச்சத்தில் இருந்தபோது 2009 ஏப்ரலில் இலங்கைத் தமிழர் ஆதரவுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இதற்குப்பிறகு மன்றக் கொடிகளை எல்லா மாவட்டங்களிலும் ஏற்றி, உரையாற்றும் பிளானில் இருந்தார் விஜய். இதனால் இன்னும் கடுப்பானது அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க.
இதற்கிடையே ஈரோட்டில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் இதற்கு அனுமதியளித்த போலீஸ், கடைசிநிமிடத்தில் பின்வாங்கியது.
''நீங்கள் மேடை ஏறக்கூடாது... மீறி ஏறினால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம்'' இல்லை என்று சொல்ல கூட்டம் ரத்தானது. அடுத்து இன்னும் பெரிய அதிர்ச்சி விஜய்க்கு காத்திருந்து. 2011 பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த 'காவலன்' படத்தை திரையிடக்கூடாதென தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு படம் ரிலீஸாகாத சூழல் உருவானது.
மிரண்டுபோனார் விஜய். சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து படம் ரிலீஸானதும் விஜய் செம ஹேப்பி. காரணம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு அவருக்கு ஹிட் படம். திமுக அரசுக்கு எதிராக வெளிப்படையாக பேசிய விஜய்:
''எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் இப்போது என்னைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்'' என்றவர் ''நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க.
அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை'' என அந்தப் பேட்டியை முடித்திருந்தார் விஜய்.
2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்றதும் தன்னுடைய மக்கள் இயக்கம் அதிமுக-வின் வெற்றிக்கு அணில் போல உதவியதாக அறிக்கைவிட்டார். இந்த அறிக்கையால் விஜய் மீது கொஞ்சம் கவனம் திருப்பினார் ஜெயலலிதா.
2013 ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்தன. மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் மிகப்பெரிய மேடை அமைத்தார்கள். அப்போது அதிமுக பொதுக்குழு கூட்ட நேரம். ஒருபக்கம் 'அம்மா அழைக்கிறார்' என ஜெயலலிதா கட் அவுட்கள் இருக்க, இன்னொருபக்கம் விஜய் நிகழ்ச்சிக்கு 'அப்பா அழைக்கிறார்' என எஸ்.ஏ.சி-யின் கட் அவுட்கள்.
இதை அப்படியே படமாக எடுத்து உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு அனுப்ப கோபத்தின் உச்சத்துக்கு சென்றுவிட்ட ஜெயலலிதா 'தலைவா' படத்தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயலலிதா அழைத்து கடுமையாக எச்சரிக்க விஜய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
திமுகவால் 'காவலன்' படத்துக்குப் பிரச்னை வந்தததுபோல 'தலைவா' ரிலீஸ் அதிமுக-வால் பிரச்னையை சந்தித்தது. அப்போது கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்க விஜய்யும், எஸ்.ஏ.சி-யும் சந்திக்கப்போக அங்கே காவல்துறையால் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
கடைசியில் கிட்டத்தட்ட விஜய் மன்னிப்புக் கேட்கும் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட 'தலைவா' ரிலீஸானது. இப்படித்தொடர்ந்து அவர் படங்கள் ரிலீஸின்போது பிரச்னைகளை சந்திப்பது 'சர்கார்' வரைத் தொடர்ந்தது.
‘மெர்சல்’ வரை இளையத்தளபதி விஜயாக இருந்தவர், மெர்சலில் தளபதியாக மாறினார். 'தளபதி' என்கிற அடைமொழி அதுவரை மு.க.ஸ்டாலினுக்கே இருந்தது. ஆனால், அதைமீறி அதுவும் சன் பிக்சர்ஸ் தயாரித்த 'சர்கார்' படத்தில் தளபதி என மாற்றினார் விஜய்.
ஆனால் எத்தனை பிர்ச்சினைகள் வந்தாலும் , ஒவ்வொரு முறையும் வீழும் போதும் , நெருப்பில் வீழ்ந்து மீண்டு எழும் பினிக்ஸ் பறவை போல தற்போது தளபதி விஜயாக ஜொலிக்கின்றார் விஜய்.
இந்த நிலையில் தற்போது விஜய் 29 ஆண்டுகள் சினிமா பயண நிறைவை குறிக்கும் விதமாக வெளியான புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.