சினிமா பைனான்சியர் அன்புச்செழியனை சுற்றி வளைத்த வருமான வரித்துறையினர் - ரூ.26 கோடி பறிமுதல்..!
40 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.26 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையினர் சோதனை
பிரபல தயாரிப்பாளர்கள் தாணு.எஸ்.ஆர் பிரபு, ஞான வேல் ராஜா, சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சினிமா தயாரிப்பாளர்கள் முறையாக வருமான வரித்துறை செலுத்தியிருக்கிறார்களா? என வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் 4 நாட்களாக சோதனை நடந்த நிலையில் இன்று வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரூ.200 கோடி வரி ஏய்ப்பு
சென்னை, மதுரை, கோவை, வேலுார் ஆகிய 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளதாகவும், குறிப்பாக சினிமா பைனான்சியர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் முறையாக கணக்கில் காட்டாத ஆவணங்கள், குறிப்பாக மின்னணு ஆவனங்கள், கணக்கில் வராத பணப்பரிவர்த்தணைக்கான ஆவணங்கள், உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி ரூபாய் வருவாய் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.26 கோடி ரூபாய் பணம், 3 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.