மாணவர்களே உஷார்... நாடு முழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்கள்...
நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் மின்னணு, அச்சு ஊடகங்களில் வந்த புகார்களின்படி நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதை பல்கலைக்கழக மானியக் குழு கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் யுஜிசியின் அனுமதி பெறாமல் இயங்கிவரும் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளதாகவும், இவற்றிற்கு மாணவர்களுக்குப் பட்டம் அளிக்கும் அதிகாரம் இல்லை என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். போலிப் பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 8, டெல்லியில் 7, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலிப் பல்கலைக்கழகம் உள்ளதாக அதன் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி என்னும் பெயரில் போலிப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. எனவே மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பட்ட படிப்புக்கான நிறுவனங்களை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.