கடலூரில் ஆண் நண்பருடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - 3 பேர் கைது
கடலூரில் ஆண் நண்பருடன் இரவு நேரத்தில் சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகேயுள்ள நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் அதே பகுதியில் ஒரு கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 28 ஆம் தேதி இரவு வேலை முடிந்து ஆண் நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். பைக்கை கம்மியம்பேட்டை இணைப்புச் சாலையில் உள்ள ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அச்சமயம் அவ்வழியாக வந்த கடலூர் திருப்பாதிரிபுலியூர் குப்பன்குளம் சிஎம்சி காலனியைச் சேர்ந்த சபரி என்கிற கிஷோர், புதுப்பாளையத்தை சேர்ந்த ஆரிப் , குப்பன்குளத்தைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் அந்த பெண்ணிடமும் உடனிருந்த ஆண் நண்பரிடமும் தகராறு செய்துள்ளனர்.
மேலும் உங்களுக்கு இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை, எதற்காக நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டு அவர்கள் இருவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் மிரட்டி வீடியோ எடுத்ததாகவும் சொலலப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை நள்ளிரவில் ரோந்து பணிக்கு சென்ற போலீசார் கடலூர் செம்மண்டலம் பேருந்து நிறுத்தத்தில் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து சதீஷ், ஆரிப், சபரி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.