உக்ரைனில் ரஷ்ய படைகள் பள்ளி மீது குண்டுகள் வீசி தாக்குதல் : 21 பேர் உயிரிழப்பு
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் தொடர்ந்து 23-வது நாளான இன்றும் போர் நீடித்து வருகிறது.
உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ரஷ்யா, உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களான தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோலில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் சுமார் 30 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா இடையே நிலவி வரும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகிற போதும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
மேலும், தலைநகர் கிவ்வில் ரஷ்ய படைகள் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கார்கிவ் நகருக்கு அருகேயுள்ள மெரேபாவில் பள்ளி மற்றும் சமுதாயக்கூடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பொதுமக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 25 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கார்கிவ் நகரில் உள்ள ஐரோப்பியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டான பாரபஷோலோ சந்தையில் குண்டுகள் வீசப்பட்டு மார்க்கெட் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
அதேபோல் கீவ்வில் உள்ள ஸ்வியா டோஷின்ஸ்கி பகுதியில் வீசப்பட்ட குண்டு மழையால் கிடங்கு தீப்பிடித்து எரிந்ததால் அதில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள ஒரு தியேட்டரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த நிலையில் அங்கும் தாக்குதல் நடத்தப்பட்டது.
தியேட்டர் மீது தாக்குதல் நடந்த போது 130 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தொடுத்துவரும் இந்த கொடூர தாக்குதல்களுக்கு பயந்து மக்கள் பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்கள் மற்றும் முகாம்களில் தவித்து வருகின்றனர்.
பெரும்பாலான நகரங்களில் உணவு மற்றும் தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் வாழ்வா சாவா என்று போராடி வருகின்றனர்.