வாக்குப்பதிவு நிறைவு - தமிழக தேர்தலில் வரலாற்று சாதனை
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்திற்கு பின்னர், 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

லட்சக்கணக்கான முதல்தலைமுறை வாக்காளர்கள், முதியோர்கள் உள்ளிட்ட ஏரளாமானோர் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், கட்சி முகவர்களின் முன்னிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
அதன் பின்னர், அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.
வாக்குப்பதிவு சதவீதம்
கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 73.83 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த முறை மாலை 5 மணிக்கே 82.24% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மொத்தமுள்ள 5.67 கோடி வாக்காளர்களில், சுமார்.4.71 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இதுவே, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு என கருதப்படுகிறது.
5 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவுகள் விவரம் இன்னும் வெளியாகாத நிலையில், மொத வாக்கு சதவீதம் 90 சதவீதத்தை தொடும் சாத்தியம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை 5 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெற உள்ளது.