மத்தியில் ஆட்சியமைப்பது யார்? தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள்? வெளியானது கருத்து கணிப்பு!
நாடாளுமன்ற தேர்தல் குறித்த ‘டைம்ஸ் நவ் - இடிஜி ரிசர்ச்’ நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 2 முறை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான 'தேசிய ஜனநாயக கூட்டணி' மாற்றும் இந்த முறை மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் எதிர்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள 'இந்தியா கூட்டணி' ஆகியவை பிரதானமாக இருக்கும் நிலையில் சில மாநிலங்களில் முக்கிய பிராந்திய கட்சிகள் தனித்து களமிறங்குகின்றன.
ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற 'அதிமுக' அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. எனவே அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும் அமைய உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும் என்று ‘டைம்ஸ் நவ் - இடிஜி ரிசர்ச்’ நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கருத்துக் கணிப்பு
அதில் 'தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி 30 முதல் 34 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 4 முதல் 8 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அந்த கூட்டணியிலிருந்து அதிமுக விலகியுள்ளதால் இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகளுக்கு 0 முதல் 2 கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 29 இடங்களில் பாஜக கூட்டணி 25 முதல் 27 இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள 26 இடங்களையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 48 இடங்களில் பாஜக கூட்டணி 26 முதல் 30 இடங்கள் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 7 இடங்களில் 5 முதல் 6 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 80 இடங்களில் 70 முதல் 74 இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 297 முதல் 317 இடங்கள் வரை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 165 முதல் 185 வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் 13 முதல் 15 இடங்களையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 24 முதல் 25 இடங்களையும், தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சி 9 முதல் 11 இடங்களையும், பிற கட்சிகள் 11 முதல் 14 இடங்களையும் பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.